Monday 14 May 2018

சாரல் துளிகள்

பறந்து சென்ற பசுங்கிளி பாதிக்கனவில் மிழற்றும்போழ், சித்தங்கலங்காதிரென்று செப்புமோ சின்னக்கிளி..

சுற்றி வளைத்து, மென்று விழுங்கி சொற்கள் உதிர்க்கப்படுமுன் கண்கள் நேரடியாகச் சொல்லி விடுகின்றன.

ஒரு நூறு யுகங்களாய் தொடுவான மண்ணுள்ளுறங்கிக் காத்திருக்கிறது அவ்விதை. அதற்கென்று விதித்த காற்றும் நீரும் வரம் கொடுக்கும் வரை அதன் தவம் தொடரும்.

எப்போது பிறக்கும்.. எப்போது இறக்கும் என்ற இரு காத்திருப்புகளின் நடுவான இடைவெளியில் எத்தனையோ காத்திருப்புகளில் வாழ்வு கடக்கிறது.

குடிப்பவன் ஈரல் வெந்து சாகிறான், அவன் குடும்பம் மனம் நொந்து சாகிறது.

எட்டாத பொருளாயின் கிட்டவில்லையெனில் சட்டென மறக்கலாம். கையிலிருந்து தட்டிப்பறிக்கப்பட்டது அதன் தழும்பையல்லவா விட்டுச் சென்றிருக்கிறது.. காலத்துக்கும் மறக்க முடியாதபடி.

ஓரலை தணிகிறதும் ஒன்று கொப்புளித்து எழுவதுமாக வாழ்வுலையில் வெந்தவியும் ஆன்மாவின் அடியாழத்தில் மின்னுகிறது சிறுதுண்டு வானவில்.

மெல்லச்சுழன்று கொண்டிருக்கும் அம்மாயச்சுழல் இரண்டாம் பேருக்குத் தெரியாமல் இழுத்துப்போட்டிருந்த அச்சிற்றெறும்பினருகில் மிதக்கும் செவ்வண்ண வாதுமையிலையில் ஏற்கனவே அடைக்கலம் புகுந்திருந்த கட்டெறும்பு முதலாம் எறும்பை வன்மத்துடன் நோக்குகையில் மேலும் வேகத்துடன் நகர ஆரம்பிக்கிறது அச்சுழல்..

முன்னாளில் பசுஞ்சிற்றாடை அணிந்த குமரியாய், இந்நாளில் குல்மொஹரும் சரக்கொன்றையும் சூடிய மங்கல மகளாய்த் திகழும் அம்மலை, சின்னாளில் வயோதிகம் கொண்டு வெறுமை கொள்ளும்போது அதைக் கை விடுவதாயில்லை கனி சுவைத்த பட்சிகள். அம்மலையைத் தூக்கிக்கொண்டு இதோ பறந்து கொண்டிருக்கின்றன அமிர்தசாகரம் நோக்கி.

மண்ணிலிருந்து முகிழ்த்தெழும் தாவரத்தின் செழிப்பு புகழப்படும் அளவுக்கு அதன் வேரின் உழைப்பு கண்டு கொள்ளப்படுவதில்லை.

2 comments:

ராஜி said...

குடிகாரன் பத்திய பதிவு அருமை

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராஜி,

ரமேஷ்.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails