Tuesday 12 January 2010

மஹாராஷ்டிராவும் பொங்கலும் பின்னே ஞானும்





உழவுக்கும்,தொழிலுக்கும் வந்தனை செய்வோம், தை பிறந்தா வழி பிறக்கும், இதெல்லாம் பொங்கல் பண்டிகையை நினைவு படுத்தும், சில பொன் மொழிகள். நம் ஊரில் தைமாசம் முதல் நாளில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. வருடம் முழுக்க உழைத்த, தனக்கு உதவிய ஜீவன்களுக்கு நன்றி சொல்லி,ஆதவனை ஆராதிக்கும் பண்டிகையிது .

ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே வீடு, வாசல் கழுவி , வீட்டை தூய்மைப்படுத்தி, சாதனங்கள் சேகரித்து என்று, பண்டிகை களை கட்ட ஆரம்பித்து விடும்.கிராமங்களில் கட்டி அடுப்பு என்று ஒன்றை வீட்டிலேயே செய்வார்கள். மண்ணைக்குழைத்து, வேண்டிய அளவிலிருக்கும் பழைய, ஓரடி உயரத்திலிருக்கும் பக்கெட்டோ, பாத்திரமோ எடுத்து, மண்ணை அதில் அழுத்திஅடைத்து அப்படியே திருப்பி பின்னால் ஒரு தட்டு... துண்டாக வந்து விழும் கட்டியை அப்படியே காய விட்டுவிடுவார்கள்.வேண்டிய எண்ணிக்கையில் செய்து காயவிட்டு வீட்டுக்கு அடிக்கும் சுண்ணாம்பில் அதற்கும் கொஞ்சம் பூசி, காவிப்பட்டையால் அலங்கரித்து வைப்பார்கள்.

பொங்கலன்று இந்த அடுப்பில் பானையை ஏற்றி, சாஸ்திரத்துக்கு ரெண்டு பனைஓலையை வைத்து அடுப்பை ஆரம்பிச்சுட்டு அப்புறம் , விறகுகளின் துணை கொண்டு பொங்கல் கொதிக்க ஆரம்பிக்கும். விறகுகளின் இடையே சில பனங்கிழங்குகளை செருகி விட்டால் பிறகு கடித்துக்கொள்ளலாம்.சமயம் பார்த்து காற்றும் சோதனை செய்யும்... புகையுடன் போராடி, பொங்கலிட்டு, பொங்கலோ பொங்கல் என்று வாழ்த்தி, சூரியனுக்கு படையல் செய்வார்கள்.இஞ்சி மஞ்சளின் பச்சைமணமும், கரும்பின் இனிப்பும் கூடுதல் மகிழ்ச்சி தருது..

பொங்கல் பண்டிகை கிராமங்களில் மண்மணத்துடன் கொண்டாடப்படுகிறது. அந்த அளவு இல்லை என்றாலும், நகரங்களிலும் மகிழ்ச்சிக்கு பஞ்சமில்லை. அடி நாதமாய் அது இரண்டு இடங்களிலும் ஊடாடிக்கொண்டுதான் இருக்கிறது.




மஹாராஷ்டிராவில் பொங்கல் 'மகர சங்கராந்தி' என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. பச்சை காய்கறிகள், வெளிறிப்போயிருக்கும் கரும்பு ,எல்லாம் இங்கேயும் உண்டு. அரிசியும் பயத்தம்பருப்பும் போட்டு செய்யற கிச்சடிதான் இன்றைய ஸ்பெஷல். நம்மூர் வெண்பொங்கலாச்சேன்னுதானே நினைக்கிறீங்க. எஸ்ஸ்.. ஆனால், மைனஸ் மிளகு, மைனஸ் சீரகம், மைனஸ் முந்திரிப்பருப்பு. ஆனா, டேஸ்ட்டு மட்டும் ப்ளஸ்.. ப்ளஸ்.. காலை பூஜை முடித்ததுமே சாயங்காலத்துக்கு ஏற்பாடுகள் நடக்க ஆரம்பித்து விடும்.

இரண்டு நாட்களுக்கு முன்னாடியே பொருட்கள் சேகரிக்கப்பட்டுவிடும். தெரிந்தவர்கள்.. நண்பர்களுக்கு...அழைப்பு அனுப்பப்பட்டுவிடும்.

சாயந்திரம் நன்கு அலங்கரித்துக்கொண்டு, சிறிதாக நறுக்கப்பட்ட காய்கறிகள், கரும்பு இவற்றின் கலவையை ஒரு சிறிய மண்பானையில் போட்டு வைத்துக்கொண்டு,இதனுடன் எள்ளுமிட்டாய்,சர்க்கரையை வைத்து தயாரிக்கப்படும் எள்ளுருண்டை,பூ, பழம், பூ,தாம்பூலம், வைத்துக்கொடுக்க ஏதேனும் ஒருபொருள், இவற்றுடன் தயாராக காத்திருப்பார்கள்.


ஒவ்வொருவராக வர ஆரம்பித்ததும், அவர்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுத்து, தாம்பூலம் அளித்து, எள்ளுமிட்டாய், சீனிஉருண்டை கலவையை"தில் குட் க்(G)யா.....கோ(G)ட்....கோ(G)ட்....போ(b)லா.." என்று சொல்லி கொடுப்பார்கள். அதாவது "இனிக்கும் எள்ளை எடுத்துக்கிட்டு இனிமையாக பேசு" என்று அர்த்தம்.வயதில் சிறியவர்கள், பெரியவர்களிடம் ஆசி பெற்றுக்கொள்வார்கள்.

குழந்தைகளும் ஒரு டப்பாவில் சீனி, எள் உருண்டைகளை போட்டுக்கொண்டு க்ரூப்பாக கிளம்பி விடுவார்கள். வீடுவீடாக சென்று எல்லோருக்கும் கொடுத்து  பெரியவர்கள் காலில் விழுந்து, ஆசி பெற்று வருவார்கள். அவர்கள் ஒருவயது கூடுதலானவர்களாக இருந்தால் கூட பெரியவர்கள் என்ற பதவி அளிக்கப்பட்டுவிடும் . நிறைய வீடுகளில் இவர்களுக்காக இனிப்புகள் வாங்கி வைத்திருந்து, கொடுப்பார்கள்.


எந்த இடத்தில் இருந்தாலும், எந்தப்பெயரில் கொண்டாடினாலும் பண்டிகை மகிழ்ச்சியையும், இனிமையையும் தரட்டும்.


எல்லோருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

டிஸ்கி: படங்கள் வலை(போட்டு)யில் பிடித்தவை.

10 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அட கட்டி அடுப்பு செய்முறை வேறா :) சூப்பர்ங்க்.

உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்..

சந்தனமுல்லை said...

நல்லாருக்குங்க...வடலூரில் கொண்டாடிய பொங்கலை நினைவு படுத்தி விட்டீர்கள்! :-) அழகான பகிர்வு!
இரு இடங்களின் பொங்கலையும் ரசித்தேன்!

imcoolbhashu said...

வாங்க முத்துலெட்சுமி,
வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

சின்னப்புள்ளைல அது என்னோட டிபார்ட்மெண்ட். ஒரு வாரமா வேலை நடக்கும். பொங்கல் அன்னிக்கு, அடுப்பு மேலே பொங்கப்பானை அவ்வளவு கம்பீரமா இருக்கும்..
இப்போ கேஸ் அடுப்புல பொங்கலிட வேண்டியிருக்கு...

imcoolbhashu said...

வாங்க சந்தனமுல்லை,

எங்கே ஆளைக்காணோம்... பப்புவோட பிஸியா!!!!!

கொசுவத்தி சுத்திடுச்சா...

வந்ததுக்கு நன்றிங்க.

pudugaithendral said...

ஜீவ்ஸ் தம்பி பொங்கல் சீர் கொடுத்திருக்காரு. இங்க மஞ்சள் குங்குமம் தில் உருண்டை சூப்பர் ஆரம்பம். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மனமார்ந்த சங்கராந்தி நல் வாழ்த்துக்கள்

imcoolbhashu said...

வாங்க புதுகைத்தென்றல்,

முதல் வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

ஆஹா..உடன்பிறவா உடன்பிறப்பு கொடுக்கிற பொங்கல் சீரை பெற்றுக்கொள்ள, இப்பவே போறேன்.

துளசி கோபால் said...

ஹல்தி குங்கும் கொடுத்ததுக்கு நன்றிப்பா. பூனா வாழ்க்கை நினைவு வந்துருச்சு.

imcoolbhashu said...

வாங்க துளசி டீச்சர்,

ஓடிக்கிட்டிருக்கும் பெரு நகர வாழ்க்கையி ல் இப்படி சில சந்தர்ப்பங்களில்தான் சக மனுஷர்கள் கூட நின்னு பேச முடியுது.

cheena (சீனா) said...

ஆகா ஆகா பொங்கல்னா இப்படித்தானா - அது சரி

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

LinkWithin

Related Posts with Thumbnails